பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அச்சுனா தொடர்பில் சபாநாயகர் எடுத்த தீர்மானத்தை வரவேற்கிறோம். இனியாவது அவர் தனது செயற்பாடுகளை மாற்றிக்கொள்வார் என்று எதிர்பார்க்கிறோம். பாராளுமன்ற சிறப்புரிமையில் இருந்துக்கொண்டு மக்கள் மத்தியில் வெறுப்பினை தூண்டி விடக்கூடாதென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு,செலவுத் திட்டத்தின் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
ஒன்பது மாதங்களுக்கும் மேலாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பாதுகாப்பான முறையில் பூமிக்கு திரும்பியுள்ளார். அவருக்கும் இணை வீரர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்பில் சபாநாயகர் புதன்கிழமை (19) பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பை விடுத்தார். இதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அறிவிப்பை முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம். பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இனியாவது தனது செயற்பாட்டை மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும்.
பாராளுமன்ற சிறப்புரிமையில் இருந்துக்கொண்டு மக்கள் மத்தியில் வெறுப்பினை தூண்டிவிடக் கூடாது. இந்த நாட்டில் முஸ்லிம் மக்கள் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பின்னர் பாரிய நெருக்கடிகளை எதிர்க்கொண்டார்கள். மீண்டும் அவ்வாறான நிலை ஏற்படக்கூடாது. ஆகவே அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.