Breaking
Tue. Apr 16th, 2024

முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது 

மாடறுப்புக்கு தடைவிதிக்கும் பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டால், அதற்கு எதிராக நீதிமன்றம் செல்ல உள்ளதாக சிலோன் தௌஹீத் ஜமாஅத்தினர் கூறியுள்ளனர். அதுபோல் வேறு அரசியல் கட்சி சாராத தரப்புக்களும் கூறியுள்ளன.  

அத்துடன் இருபதாவது அரசியலமைப்பு திருத்தத்திற்கான பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை எதிர்த்து பல தரப்பினர்களும் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளனர்.

எமது சமூகத்தில் ஒரு கூட்டம் இருக்கின்றது. எதெற்கெடுத்தாலும் குதர்க்கம் பேசிக்கொண்டே இருப்பது அவர்களது இயல்பாகும். ஆனால் இவ்வாரானவர்களினால் சமூகத்திற்கு எந்த பிரயோசனமுமில்லை.

உலக வாழ்க்கையில் மூழ்கி அதன் அலங்காரங்களில் அதிக ஆசை கொண்டவர்களுக்கு ஆட்சியாளர்கள் மீது பயம் ஏற்பட்டு அடிமையாக வாழவே முயற்சிப்பார்கள்.

அல்லது, ஆட்சியாளர்களின் கட்சிக்கு தீவிர ஆதரவாக செயல்படுகின்றவர்களும் தங்களது சமூகத்தைவிட அவர்களின் சர்வாதிகார செயல்பாடுகளை நியாயப்படுத்துவதையும் காணக்கூடியதாக உள்ளது.   

ஆனால் மறுமை வாழ்வில் நம்பிக்கை கொண்டவர்களும், ஸஹாபாக்கள் மற்றும் எமது முன்னோர்கள் அநீதியை எதிர்த்து எவ்வாறு போராடினார்கள் என்றும், அவர்களது போராட்டத்தினதும், தியாகத்தினதும் விளைவாகவே இன்று பல உரிமைகளை நாங்கள் அனுபவிக்கின்றோம் என்ற உண்மைகளை தெரிந்தவர்களும், எவருக்கும் அச்சப்படாமல் தொடர்ந்து எமது எதிர்கால சமூகத்துக்காக அநீதியை எதிர்த்து களமிறங்குவர்.   

நாங்கள் ஒன்றை கவனிக்க வேண்டும். அதாவது நீதியை வேண்டியே நீதிமன்றம் செல்கின்றார்களே தவிர, அநியாயத்துக்காக சோரம்போகவில்லை. அத்துடன் இது இலங்கையின் அரசியலமைப்புக்கு உற்பட்டதாகும்.

அரசாங்கம் என்னதான் அநியாயம் செய்தாலும், சர்வாதிகார போக்கினை கடைப்பிடித்தாலும் நாங்கள் வாய்மூடி மௌனமாக இருக்கவேண்டும் என்று கூறுவது அவர்களது அடிமைத்தனத்தையும், முட்டாள்தனத்தையும் வெளிப்படுத்துகின்றது.

எமக்கு அருகில் இருக்கின்ற தமிழ் சகோதரர்கள் ஏதாவதொரு விடயங்களுக்காக நாளாந்தம் வடக்கிலும், கிழக்கிலும் போராடிக்கொண்டே இருக்கின்றார்கள். தமிழர்களுக்கு இருக்கின்ற அதே பிரச்சினைகள் எமது சமூகத்திற்கும் உள்ளது.

அவ்வாறிருந்தும் நாங்கள் அஹிம்சைவழியிலும் போராடவில்லை. எமது தலைவர்கள் எமக்கு போராட கற்றுத்தரவில்லை. சாதாரணமாக அநீதியை எதிர்த்து நீதிமன்றம் செல்வதற்கே விமர்சனம் என்றால், இன்றைய தமிழர்கள் போன்று அஹிம்சை வழியில் போராடினால் இவ்வாறானவர்களின் நிலைப்பாடுகள் எவ்வாறு இருக்கும்.

எனவே அநீதியை எதிர்க்கின்றவர்களை விமர்சனம் செய்கின்ற கூட்டம் இருக்கும் வரைக்கும் சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு அது நன்மையாகவே அமையும்.  

இவ்வாறானவர்களின் விமர்சனங்களை கணக்கில் எடுக்காமல்,  இருக்கின்ற உரிமைகளை பாதுகாப்பதற்காகவும், எமது எதிர்கால சந்ததிகளின் இருப்புக்காகவும் அநீதியை எதிர்த்து களமிரங்குகின்றவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *