வடக்கில் இணைந்த நேர அட்டவணைக்கு இ.போ.ச இணக்கம் – டெனிஸ்வரன்

நீண்டகாலமாக இலங்கைப் போக்குவரத்து சபைக்கும் தனியார் போக்குவரத்துத் துறைக்கும் இடையில் நிலவிவந்த பிரச்சினை தற்போது முடிவு நிலையை எட்டியிருப்பதாக வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

இந்த நேர அட்டவணையை தயார் செய்யும் பொருட்டு மாவட்ட ரீதியாகவும், மாகாண ரீதியாகவும் இதுவரை 35 கூட்டங்களுக்கு மேல் நடாத்தப்பட்டு முடிவு செய்யப்பட்டுள்ள நேர அட்டவணைக்கு இறுதிவரை இ.போ.சபையினர் தமது சம்மதத்தை தெரிவிக்காமல் இழுபறி நிலையில் இருந்துவந்ததாகவும்,

நேற்றைய தினம் அமைச்சர் நேரடியாக பிராந்திய பிரதம முகாமையாளர் (CRM) மற்றும் நடைமுறைப்படுத்தும் முகாமையாளர் (OM) ஆகியோருடன் தொடர்புகொண்டு விடயம் தொடர்பில் கலந்துரையாடியபோது இறுதியில் தமது சம்மதத்தை தெரிவித்திருக்கின்றனர்.

இந்த நிலையில் ஏற்கனவே தனியார் போக்குவரத்துத் துறையினர் தமது சம்மதத்தை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்சந்தர்ப்பத்தில் இரண்டு தரப்பினரும் இவ்வாறு ஒற்றுமை நிலையில் ஓர் சுமுகமான நிலைக்கு வந்திருப்பதையிட்டு அமைச்சர் தனது நன்றிகளை இரண்டு தரப்பினருக்கும் தெரிவித்திருப்பதாகவும் தெரியவருகின்றது.

மேலும் இவ்விடயம் தொடர்பில் உருவாக்கப்பட்ட உயர்மட்டக் குழு எதிர்வரும் 19-04-2016 அன்று பிற்பகல் 3 மணியளவில் அமைச்சரின் தலைமையில் ஒன்றுகூடவுள்ளதாகவும்,

அன்றைய தினமே புதிய இணைந்த நேர அட்டவணை எத்தினத்தில் இருந்து அமுல்ப்படுத்துவது என்னும் தீர்மானத்தையும் எடுக்கவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares