பிரதான செய்திகள்

முஜாஹிர் தலைமையிலான மன்னார் பிரதேச சபை தோல்வி! எதிராக 12பேர்

மன்னார் பிரதேச சபையின் 2020ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இன்று 12 வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.


இன்று காலை 10 மணியளவில் சபை நடவடிக்கை ஆரம்பிக்க இருந்த போதும் சுமார் 11 மணியளவிலேயே சபை அமர்வு ஆரம்பிக்கப்பட்டது.

2020ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் முறைப்படி தவிசாளரினால் மன்னார் பிரதேச சபை செயலாளருக்கு வழங்கப்பட்டு, ஆதரவளிக்கும் பிரேரணை தவிசாளரினால் முன்வைக்கப்பட்டது.

இதனையடுத்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் யூட் கொண்சாள் குலாஸ் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக கட்சி சார்பாக தன்னிச்சையாகச் செயல்படுதல், நம்பகத்தன்மையின்மை, 2019 ஆம் ஆண்டிற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்து தவிசாளர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை ஊடாகக் 2020ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிரான பிரேரணையை முன்வைத்தார்.

இதை உறுப்பினர் ஞானப்பிரகாசம் ரிச்சேட் முன்மொழிய உறுப்பினர் பாலசிங்கம் கதிர்காமநாதன் வழிமொழிந்தார்.

இதற்கு ஆதரவான உறுப்பினர்கள் தமது ஆதரவை தெரிவித்த நிலையில் வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்த தவிசாளர் நீதிக்குழுவின் தீர்மானத்திற்கமைவான திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டிய போதும் உறுப்பினர்கள் சிலர் தகுந்த காரணங்களை வெளிப்படுத்தினர்.

இந்தநிலையில், வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் சரியானதென வாதிட்ட போதும் இதற்கு ஆதரவு இல்லாத நிலையில் வாக்கெடுப்பு இடம் பெற்று திட்டத்திற்கு ஆதரவாக 7 உறுப்பினர்களும் எதிராக 12 உறுப்பினர்களும் வாக்களித்ததுடன், உதவித் தவிசாளர் இஸ்மாயில் முகமட் ஸ்சதீன் நடு நிலையாகச் செயல்பட்டார்.

ஒரு உறுப்பினர் அமர்வுக்கு சமூகமளிக்காமலும் வரவு செலவுத் திட்டம் ஆதரவு இல்லாமல் 2020ஆம் ஆண்டிற்கான மன்னார் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டது.

கடந்த 07ஆம் திகதி மன்னார் பிரதேச சபையின் 20ஆவது அமர்வின் போது குறித்த விவகாரம் முன்வைக்கப்பட்ட போது சபையில் அமளி துமளி ஏற்பட்டு தவிசாளரினால் எந்த ஒரு காரணமும் இல்லாது சபை 14 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டு இன்று இடம் பெற்ற நிலையிலே 2020ஆம் ஆண்டிற்கான மன்னார் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

21 உறுப்பினர்களைக் கொண்ட மன்னார் பிரதேச சபையில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 6 உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏனைய கட்சி ஆதரவுடன் கடந்த 10.05.2018 தொடக்கம் தவிசாளர் சாகுல் கமில் முகமட் முஜாகிர் தலைமையில் சபை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

Related posts

நன்றியுணர்வுள்ள முசலி மக்களின் மீள்குடியேற்ற வரலாறு

wpengine

மன்னார்-எருக்கலம்பிட்டியில் பகுதியில் மஞ்சள் கடத்தல்

wpengine

இந்தோனேசியாவில் தேவாலயத்தை இலக்கு வைத்து தற்கொலை தாக்குதல்!

Editor