தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்து நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை (04) சரணடைந்த ஒருவர் தொடர்பில் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
நாவலப்பிட்டி, செம்ரோக் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான 46 வயதுடைய கயானி தில்ருக்ஷி குமாரி என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கணவனுடன் அடிக்கடி ஏற்பட்ட முரண்பாடு காரணமாக குறித்த பெண் தனது மகளின் வீட்டில் தங்கியிருந்த நிலையில் கொழும்பில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். திங்கட்கிழமை (03) அன்று நவலப்பிட்டிக்கு வந்து அங்கு நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று தனது மகளின் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை (04) அதிகாலை 1.30 மணியளவில், குறித்த பெண்ணின் கணவன் ஜன்னல் வழியாக வீட்டுக்குள் ரகசியமாக நுழைந்த அறையில் தூங்கிக் கொண்டிருந்த தனது மனைவியை கத்தியால் குத்தியதாகவும், தப்பிக்க வீட்டை விட்டு வெளியே ஓடிய போது அவரை பின் தொடர்ந்து மீண்டும் கத்தியால் தாக்கி தலையில் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தனது தாயைக் காப்பாற்றச் சென்ற மகளும் காயமடைந்துள்ளதுடன் குடும்பத் தகராறின் விளைவாக இந்தக் கொலை நடந்துள்ளதாகவும், இறந்த பெண்ணும் சந்தேக நபரான கணவரும் சிறிது காலமாக பிரிந்து வசித்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.