பூதத்தைப் போன்று மஹிந்த வாங்கிய கடன்கள் வெளிவருகின்றன – அமைச்சர் கபீர் ஹாசிம்

மஹிந்த ராஜபக்ச வாங்கிய கடன் தொகை எவ்வளவு என்பதை இன்றுவரை நிச்சயித்துக் கொள்ள முடியாதுள்ளது. வாரத்திற்கு வாரம் மஹிந்த வாங்கிய கடன்கள் “பூதத்தை” போன்று வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதனை எவ்வாறு சமாளிப்பது என அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் கபீர் ஹாசிம் மேலும் தெரிவிக்கையில்,

பொது எதிர்கட்சி எனக் கூறிக்கொள்வோர் பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியேயும் பொய்யான கருத்துக்களை தெரிவித்து மக்களை, பிழையாக வழிநடத்துகின்றனர்.

அரச வங்கிகள் ஒரு போதும் தனியார் மயமாக்கப்படமாட்டாது அதனை பாதுகாப்பதற்கான அனைத்தையும் அரசு முன்னெடுக்கும். இவ்வாறான எந்தவொரு நிபந்தனையையும் சர்வதேச நாணய நிதியம் விதிக்கவில்லை.

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் இரகசிய பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு உடன்படிக்கைகள் செய்து கொள்ளப்பட்டன. கடன்கள் பெற்றுக்கொள்ளப்பட்டது.

மஹிந்த ராஜபக்ச வாங்கிய கடன் தொகை எவ்வளவு என்பதை இன்றுவரை நிச்சயித்துக் கொள்ள முடியாதுள்ளது. வாரத்திற்கு வாரம் மஹிந்த வாங்கிய கடன்கள் “பூதத்தை” போன்று வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இதனை எவ்வாறு சமாளிப்பது எவ்வாறு வெற்றி கொள்வது. நாட்டின் பொருளாதாரத்தை எப்படிக் கட்டியெழுப்புவது என்பது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்திடம் ஆலோசனைகளை பெற்றுக்கொள்கின்றோம்.

பொருளாதார நெடிக்கடிகள் தலைதூக்கினால் அந்தச் சவால்களுக்கு நாம் முகம் கொடுக்க வேண்டும். எனவே தான் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுக்களை நடத்துகின்றோம்.

கடந்த காலங்களில் மகிந்த ராஜபக்ச செய்த பாவங்களை நாம் கழுவவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஒரு வரையறை இல்லாமல் கடன்கள் வாங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் மக்களுக்கு கண்காட்சிகளே காண்பிக்கப்பட்டுள்ளன. இதனால் நாட்டில் உற்பத்திகள் அதிகரிக்கப்படவில்லை. தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்தப்படவில்லை. அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படவில்லை.

மகிந்த செய்த பாவத்தை நாம் கழுவிக் கொண்டிருக்கின்றோம். அவர் தான் நாட்டில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியவர். இன்று நாம் இதிலிருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.

எனவே மக்கள் மீது சுமைகளை அதிகரிக்காது அரச தனியார் ஊழியர்களுக்கான சம்பளங்களில் எந்த விதமான பாதிப்பையும் ஏற்படாதவிதத்தில் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து “தயார் நிலை ஏற்பாடாக” கடன் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.

இதற்காக அவர்களின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு அரச நிறுவனங்களையோ அரச வங்கிகளையோ தனியார் மயமாக்க தீர்மானம் எடுக்கவில்லை. இவ்வாறான செய்திகளில் எவ்விதமான உண்மையும் இல்லை. என்றும் அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.

 

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares