பிரதான செய்திகள்

தமிழ்,முஸ்லிம் இனவாதம் பேசிய என வட மாகாண முன்னாள் முதலமைச்சர்

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களின் காணிகளை கூடிய விலைக்கு முஸ்லிம்கள் கொள்வனவு செய்வதாக மக்கள் தன்னிடம் தெரிவித்துள்ளார்கள் என வட மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


மட்டக்களப்பு – வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கதிரவெளி கிராமத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயற்பாடுகள் தொடர்பில் அறிவுறுத்தும், மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் மக்கள் சந்திப்பு இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் நான் சென்ற இடங்கள் எல்லாம், காணிகள், உரித்துக்கள் பறிபோகின்றதாகவும், இதற்கு காரணமாக முஸ்லிம்கள் இருப்பதாகவும் மக்களால் என்னிடம் கூறப்பட்டது.

அதாவது குறைந்த விலையில் உள்ள காணிகளை கூடிய விலை கொடுத்து வாங்குவதாக கூறப்படுகின்றது. எமது மக்கள் ஏதோவொரு காரணத்திற்காக விற்பனை செய்து விட்டு சென்றார்கள் என்றால் அந்த இடத்தில் வந்து முஸ்லிம்கள் குடியிருக்கின்றார்கள்.

வறுமையின் காரணமாக எமது பெண்கள் மதமாறுவது பிரச்சினையாக உள்ளது. இதனால் எமது உரித்துக்கள் பறிபோகின்றன. இவற்றுக்கெல்லாம் எவ்வாறு முகம்கொடுக்க வேண்டும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

நாங்கள் எங்களைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். நாங்கள் பலமாக இருந்தால் எங்கள் பெண்கள் வெளியில் போக மாட்டார்கள், எங்களது காணிகளை மற்றவர்கள் கொள்வனவு செய்வதற்கு அவசியம் இருக்காது.

ஏனெனில் நாம் பொருளாதார ரீதியாக நல்ல நிலைமைக்கு வந்தால் எமது காணிகளை விற்பனை செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. ஏழ்மை நிலையில், வசதியற்ற நிலையில் இருந்தோமானால் மற்றவர்களின் சதிக்குள் செல்ல வேண்டிய நிலைவரும்.

தங்கள் வாழ்க்கை நிலைமையை மாற்ற சகலதையும் செய்ய வேண்டும். உங்கள் கிராமத்தை முன்னேற்ற நீங்கள் முன்வர வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக எங்களால் முடியும் என்ற நம்பிக்கை வரவேண்டும்.

புதிய வாழ்க்கையை கொண்டு வரவுள்ளோம் என்ற நம்பிக்கை உங்களிடம் இருக்க வேண்டும். அத்தோடு பொறுமையும் இருக்க வேண்டும். எங்களுடைய கனிய வளங்களை பெறுவதற்காக மக்களிடம் பல பொய்களை கூறி வளத்தினை பெற்றுள்ளார்கள் என்பது தெளிவாக தெரிகின்றது.

எனவே இதனை எவ்வாறு தடை செய்யலாம், இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கலாம், இதனை பாதுக்காக என்ன செய்ய வேண்டும் என்று பல கோணங்களில் இருந்து பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள எமது தமிழ் மக்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. எல்லாம் போய் விட்டது இனி என்ன நடக்கப் போகின்றதோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் உள்ளதை நான் காண்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை குறித்த மக்கள் சந்திப்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எஸ்.சோமசுந்தரம், நிர்வாக உப செயலாளர் ஆ.ஆலாலசுந்தரம், சட்டவிவகார உப செயலாளர் ரூபா சுவேந்திரன், ஊடகம் மற்றும் செயற்றிட்ட ஆக்க உப செயலாளர் த.சிற்பரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts

நல்லாட்சியில் மீண்டும் அதிகரிக்கும் எரிவாயுவின் விலை

wpengine

இலங்கை குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்க பகிஸ்தான் அரசு நடவடிக்கை- அமைச்சர்

wpengine

சஞ்சீவ கொலை – துப்பாக்கிதாரியின் வட்ஸ்அப் உரையாடல் வௌியானது. “”நீ, என் உயிர்…”!

Maash