பிரதான செய்திகள்

கூட்டுறவுச் சங்கங்கள் பலவற்றில் பெரியளவிலான ஊழல் மோசடிகள்

பதுளை மாவட்டத்தின் பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் பலவற்றில் பெரியளவிலான ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் பதுளை பிராந்திய பணிமனையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட ஊவா மாகாண சபை உறுப்பினர் சமந்த வித்தியாரட்ண மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

பதுளை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் ஒரு கோடியே பதின்மூன்று இலட்சம் ரூபா நிதியில் ஊழல் மோசடி இடம்பெற்றுள்ளது.

ஹாலி-எலை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் எரிபொருள் நிலையத்தில் இருபத்தி மூன்று இலட்சம் ரூபா நிதியில் ஊழல் மோசடி இடம்பெற்றுள்ளது.

அத்துடன் பதுளை கூட்டுறவு சங்கத்தின் கிராமிய வங்கியில் ஐந்து இலட்சத்து எண்பத்தொன்பதாயிரத்து எண்ணூற்று ஐந்து ரூபா,  மகியங்கனை கூட்டுறவு சங்கத்தின் ஹெபராவ கிராமிய வங்கியில் இருபது இலட்சம் ரூபா, பண்டாரவளை கூட்டுறவு சங்கத்தின் தெமோதரை கிராமிய வங்கியில் அறுபத்தி மூன்று இலட்சம் ரூபா, கெந்தகொல்லை கிராமிய வங்கியில் நாற்பத்து மூன்று இலட்சம் ரூபா, கெந்தகொல்ல கிழக்கு கிராமிய வங்கியில் நாற்பத்தி ஏழு இலட்சம் ரூபா, தெபத்தை கிராமிய வங்கியில் பன்னிரண்டு இலட்சம் ரூபா, நுகந்தலாவை கிராமிய வங்கியில் ஐந்து இலட்சம் ரூபா என்ற வகையில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளன.

இவ் ஊழல் மோசடி விடயம், மேற்கொள்ளப்பட்ட ஆய்விலிருந்து தெரியவந்துள்ளதுடன் இதற்கான அனைத்து ஆதாரங்களும் திரட்டப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

மடு திருத்தலத்தில் சிங்கள தாய் மரணம்

wpengine

வடக்கில் இலவசமாக தென்னங்கன்றுகள் மற்றும் உரம் வழங்குவதற்காக 819 இலட்சம் ரூபா ஒதுக்கீடு..!

Maash

குருணாகல் மாவட்டத்தின் முதாவது முஸ்லிம் MPஅல் ஹாஜ் AHM. அலவி காலமானார்!

Editor