அரச நிறுவனங்களின் சின்னங்களைப் பயன்படுத்தி வேலைவாய்ப்புகளை பெற்றுத் தருவதாகக் கூறி தனிநபர் தரவு சேகரிப்பு மற்றும் பண மோசடி இடம்பெறுவதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் அரச நிறுவனங்களின் சின்னங்களைப் பயன்படுத்தி வேலைவாய்ப்புகளை பெற்றுத் தருவதாக உண்மைக்குப் புறமான தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. குறித்த போலி தகவல்களினூடாக கிடைக்கப்பெறும் இணைய இணைப்புகளினுள் பிரவேசிப்பதன் மூலம் தனிநபர் தரவுகள் திருடப்படுவதுடன் அக்குழுவினர் பண மோசடியிலும் ஈடுபட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
கடந்த சில நாட்களில் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பாக பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவின் தகவல் பாதுகாப்பு பொறியியலாளரான ஷாருக்க தமுனுபொல தெரிவித்துள்ளார். பல அரச நிறுவனங்களின் சின்னங்களைப் பயன்படுத்தி அரச தொழில் வெற்றிடங்கள் நிலவுவதாகவும் அதற்கான புதிய ஆட்சேர்ப்புகள் இடம்பெற உள்ளதாகவும் பல விளம்பரங்கள் வாட்சப், முகப்புத்தகம் உள்ளிட்ட பல சமூக ஊடகங்களில் பகிரப்படுவதைக் காணக்கூடியதாக உள்ளது.
மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நோக்குடனும் தனிநபர் தொடர்பான முக்கிய தரவுகளை சேகரிக்கும் நோக்குடனும் மேற்படி மோசடி இடம்பெறுவதாக தெரியவந்துள்ளது.
அடையாள அட்டை பிரதிகள் கடவுச்சீட்டு பிரதிகள், விமான பயணச்சீட்டு பிரதிகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களின் தரவுகளைப் பெற்றுக்கொள்ளும் செயற்பாடு இடம்பெறுகிறது.
தற்போது இம்மோசடித் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், அவ்வாறான மோசடிகார்களின் போலியான தகவல்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.